நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் இருந்த காசி, அவரது தந்தை உள்பட 3 பேர், பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ததுடன், லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் கைதாகி உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (26), நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் இவரை சிபிசிஐடி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். காசி மீது இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காசி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டமும் பாய்ந்தது. விசாரணைக்காக தினமும் கோர்ட்டுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில், நாகர்கோவில் சிறையில் அவரை அடைத்து இருந்தனர். கந்துவட்டி வழக்கில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கப்பாண்டியன் கைது செய்யப்பட்டார். மேலும் இளம்பெண்களை மிரட்டிய வழக்கில் காசியின் நண்பர்கள் டைசன் ஜினோ, தினேஷ் கைதாகி இருந்தனர். இதில் தினேஷ் ஜாமீனில் வந்து உள்ளார். காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், நண்பர் டைசன் ஜினோ ஆகிய 3 பேர் நாகர்கோவில் சிறையில் இருந்தனர்.