பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், திருமணத்திற்கு முன்னதான ஃபோட்டோ சூட்டின் போது இளம் ஜோடி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு அருகே உள்ள கியாத்மாரனஹளியை சேர்ந்த 28 வயது சந்ரு, 20 வயது சசிகலாவுக்கு வரும் 22ம் தேதி பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் திருமணம் நடைபெறவிருந்தது. இதையொட்டி திருமணத்திற்கு முன்னதான ஃபோட்டோ சூட்காக, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தலக்காடு செல்ல முடிவு செய்த அந்த காதல் ஜோடி, பரிசல் மூலம் காவிரி ஆற்றை கடக்க முடிவு செய்துள்ளனர். உறவினர்கள் மற்றொரு பரிசலிலும், இவர்கள் ஒரு பரிசலிலுமாக காவிரி ஆற்றை கடந்துள்ளனர். ஆனால் கரையை எட்ட சுமார் 15 மீட்டர் தூரமே இருந்த போது இளம்ஜோடியின் கனவில் விதி விளையாடிவிட்டது.