புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு தர முடியாது என ஆளுநர் மறுத்த விவகாரம் சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநரின் செயல், ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், நீட் தேர்வு என்பது அகில இந்திய பாடத்திட்டத்தின் மூலமாக கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் அதிகப்படியான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்து அது சம்பந்தமான கோப்பையை அனுப்பினோம்.