இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார் தமிழக வீரர் நடராஜன்...!! டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சேர்ப்பு; பிசிசிஐ அறிக்கை

மும்பை: ஆஸி.க்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பிடித்தார். காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி விலகியதால் நடராஜனுக்கு டி-20 அணியில் இடம் பிடித்தார். இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. டிசம்பர் 17-ம் தேதி முதல் டி20 தொடரும், ஜனவரி 15-ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 4 டெஸ்ட் 3 ஒருநாள் 3 டி20 போட்டிகள் என மிக நீளமான தொடர் நடைபெறப்போகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக இரு தரப்பு கிரிக்கெட் வாரியங்களும் செயல்படுத்தி வருகின்றன.

2018 ஆம் ஆண்டு கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது வரலாற்றை மாற்றி எழுதும் வகையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; இந்திய அணி கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று டெஸ்டுகளில் இடம்பெற மாட்டார். அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்டுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி விடுவார். காயம் மற்றும் ஓய்வு காரணமாக ஒருநாள், டி20 தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா தேர்வாகியுள்ளார்.

இந்திய ஒருநாள் அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் சிகிச்சை பெற்று வருகிறார் இஷாந்த் சர்மா. முழுமையான உடற்தகுதியை அடைந்த பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அவர் இணைத்துக்கொள்ளப்படுவார். காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து வருண் சக்ரவத்தி விலகியுள்ளார். இதனால் தமிழக வீரர் டி. நடராஜன் இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ளார். ஐபிஎல் போட்டியில் சஹாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய நிலைமை குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். கமலேஷ் நாகர்கோட்டி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லமாட்டார். மருத்துவக் குழுவினர் அவரைக் கண்காணித்து வருகிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: