புதுடெல்லி: ‘பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்த பொது விவகாரங்களுக்கான மையம்’ என்ற ஆய்வு அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைவராக இருக்கிறார். மாநிலங்களின் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் அதன் நிர்வாக செயல் திறனை அளவிட்டு, இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான பட்டியலை நேற்று இது வெளியிட்டது. அதில், சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. நான்கு தென்மாநிலங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பெரிய மாநிலங்கள் பிரிவில் கேரளா (1.388புள்ளி), தமிழ்நாடு (912) ஆந்திர பிரதேசம் (531), கர்நாடகா (468) புள்ளிகள் பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.