சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்; 5வது குற்றவாளி ராஜஸ்தானில் கைது: மும்பை போலீஸ் அதிரடி

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில், ஐந்தாவது நபரை மும்பை காவல்துறை கைது செய்திருக்கிறது.பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பங்களாவானது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது. இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் கடந்த மாதம் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த விஷயத்தில் வழக்குப் பதிவு செய்த மும்பை காவல்துறை, துப்பாக்கிச்சூடு நடத்திய விக்கி குப்தா, சாகர் ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே, பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய், இந்த துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்த அனுஜ் தாபன் மற்றும் சோனு சுபாஷ் ஆகியோர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐந்தாவது நபரை மும்பை காவல்துறையினர் ராஜஸ்தானில் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5வது நபர் ரபிக் சவுத்ரி என்பது அடையாளம் காணப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய இருவருக்கும் ரபிக் சவுத்ரி பணம் கொடுத்து உதவியதாகவும், துப்பாக்கி சூடு சம்பவத்தை வீடியோ எடுத்து அதனை பிஷ்னோய்க்கு அனுப்பியதாகவும் போலீசார் கூறினர். தற்போது முகமது சவுத்ரியை வரும் 13 வரை குற்றப் பிரிவு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்; 5வது குற்றவாளி ராஜஸ்தானில் கைது: மும்பை போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: