லக்னோ, :வீட்டு வேலைக்கு காவலரை பயன்படுத்திய விவகாரத்தில் ‘ஹோம்கார்டு’ மாவட்ட அதிகாரியை உத்தரபிரதேச அரசு ‘டிஸ்மிஸ்’ செய்து உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்ட ஊர்க்காவல் படை தளபதி கிருபா சங்கர் பாண்டே மீது கடந்தாண்டு நிதிமோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. மேலும், அவர் தனது வீட்டு வேலைக்கு ஊர்க்காவல் படையை சேர்ந்த தன்னார்வ காவலர்களை கட்டாய பணியில் அமர்த்தி வேலை வாங்கியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. மாநில உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அரசு ஒதுக்கும் நிதியில் முறைகேடு செய்தது, வீட்டு வேலைக்கு தன்னார்வ காவலர்களை பணியில் அமர்த்தியது உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவரை அம்மாநில அரசு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.