புதுக்கோட்டை, : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டந்தோறும் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி முதல்வர் பழனிசாமி இன்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தந்தார். இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட முதல்வர் பழனிசாமி காலை 8.30 மணிக்கு திருச்சி விமானம் நிலையம் வந்தார். முதல்வருடன் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் உடன் வந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், காமராஜ், விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கலெக்டர் சிவராசு மற்றும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.