கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதி கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சுதந்திர கண்ணன். ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்தேன். வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்தோம். இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது, அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது.

இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதி கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: