வாகன சோதனையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மொபட் அபேஸ்: போதை ஆசாமிகளுக்கு வலை

பெரம்பூர்: பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி மற்றும் ஒரு காவலர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை மடக்கியபோது, மது போதையில் இருப்பது தெரிந்தது. இதனால், ஆல்கஹால் அளவை காட்டும் கருவியை கொண்டு அவர்களுக்கு சோதனை செய்தனர். அப்போது, கருவி சரியாக வேலை செய்யாததால், அவர்களை ஓரமாக நிற்கும்படி கூறிவிட்டு, அந்த பக்கமாக வந்த மேலும் இருவரை மடக்கி பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது, உதவி ஆய்வாளரின் மொபட் மற்றும் ஆல்கஹால் அளவை காட்டும் கருவி,

கேமரா ஏடிஎம் கார்டு மற்றும் தங்களது பைக்குடன் போதை ஆசாமிகள் 2 பேர் தப்பினர். இதனால், அதிர்ச்சியடைந்த எஸ்ஐ பாலமுரளி, செம்பியம் குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் உதவி ஆய்வாளர் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசாரிடமே இருசக்கர வாகனம் மற்றும் ஆல்கஹால் அளவை காட்டும் கருவி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: