புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக என்.வி.ரமணா இருக்கிறார். இவர், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆந்திர நீதிமன்ற செயல்பாடுகளில் மாநில அரசுக்கு எதிராக தனதுசெல்வாக்கை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்,ஏ.பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கடிதம் எழுதினார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், ‘நீதிபதி ரமணா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ஜெகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்,’ என வழக்கறிஞர் சுனில் குமார் சிங் என்பவர் தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளார். அதேபோல், ‘ஜெகன் மோகன் ரெட்டி மீது நிதி மோசடி, ஊழல், 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் முதல்வர் பதவியில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர். அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும்,’ என வழக்கறிஞர் ஜி.எஸ்.மணியும் வழக்கு தொடர்ந்துள்ளார்.