துணைவேந்தரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை: உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி

தர்மபுரி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:  பிளஸ்2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், உடனடி தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று, உடனே கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும், கல்லூரிகளில் தொடர்பு கொண்டு சேர்ந்து கொள்ளலாம். இந்த மாதம் 31ம் தேதி வரை இந்த வாய்ப்பு உள்ளது.

‘சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இப்பல்கலைகழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கோரி, துணைவேந்தர் அறிக்கை சமர்ப்பித்தது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை முடிவின்படி, அரசு நடவடிக்கை எடுக்கும். உயர் சிறப்பு அந்தஸ்து தகுதியில், தமிழக அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை பாதிக்கும். மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் சூழல் மற்றும் கல்வி கட்டணம் கூடுதலாக வசூலிக்கும் நிலை ஏற்படும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. தற்போது  உள்ள நடைமுறையே தொடரும்’.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு தேவையான நிதியை தமிழக அரசே வழங்கும். மேலும் துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியது தொடர்பாக அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தின் அடிப்படையில் அவர் மீதான நடவடிக்கை  தமிழக அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: