வெளிநாடுகளில் இருந்து ஏசி இறக்குமதிக்கு திடீர் தடை: மத்திய வர்த்தக இயக்குநரகம் அறிவிப்பு

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து ‘ஏசி’ இறக்குமதிக்கு மத்திய வர்த்தக இயக்குனரகம் திடீர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎப்டி) நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிவிப்பில், ‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தாண்டு பல்வேறு துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனேவ ஏசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக ஏசி இறக்குமதி ெசய்யப்பட்டது. அதனை குறைப்பதற்கான நடவடிக்கையாக, தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம், பல்வேறு வண்ண தொலைக்காட்சி பெட்டிகளின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.

தற்போது ஏசி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கைகளை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் சில புதிய நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான ஏர் கண்டிஷனர் (ஏசி) ஏற்றுமதியாளராக சீனாவும், தாய்லாந்தும் உள்ளன. மத்திய அரசின் தரவுகளின்படி, மேற்கண்ட நாடுகளில் இருந்து 90 சதவீத பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் இந்திய பொருளாதார தேக்கம், இந்திய - சீன எல்லை பிரச்னை ஆகியவற்றின் தொடர்ச்சியாக பல பொருட்களுக்கு இறக்குமதிக்கான தடை விதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: