தாவூத் இப்ராகிமுடன் நேரடி தொடர்பில் இருந்த இலங்கையை சேர்ந்த முக்கிய குற்றவாளி பெங்களூருவில் கைது

சென்னை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் பல சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களின் நேரடி தொடர்பில் இருந்த இலங்கையை சேர்ந்த முக்கிய குற்றவாளி, காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசாரால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இலங்கையில் நடந்த பல்வேறு முக்கிய கொலை சம்பவங்கள் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட கட்டகாமினி (எ) பொன்சேகா, கியூ பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அவர், அழாகாப்பெரும்மக, சுனில், ஜெமினி என்ற பெயரிலும் பல சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரது பின்னணியில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் பல சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சட்டவிரோத போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படும் என்பதால், பொன்சேகா, அங்கிருந்து தப்பி காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 6 மாதமாக தங்கினார்.

இதை தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுடன் அவர், நேரடி தொடர்பு வைத்திருந்ததால், அவரது தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர். இதை அறிந்த பொன்சேகா, காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு தப்பி சென்றார். இந்நிலையில் காஞ்சிபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு, பெங்களூருவில், பொன்சேகாவை கைது செய்தனர். பின்னர், செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  முடிவு செய்துள்ளனர்.

Related Stories: