கணவர் சுந்தர்.சியின் அழுத்தத்தால் பாஜவில் நான் இணைந்தேனா? நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி

சென்னை: “கணவர் சுந்தர்.சியின் அழுத்தத்தால் பாஜவில் நான் இணைந்தேனா? என்று நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழக காங்கிரஸில் இருந்து விலகி நடிகை குஷ்பு நேற்று முன்தினம் பாஜவில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு பாஜ தலைவர் எல்.முருகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜ அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் சக்ரவர்த்தி, மீனவர்பிரிவு தலைவர் எஸ்.சதீஷ்குமார், ஏ.என்.எஸ்.பிரசாத், தென்சென்னை மாவட்ட பாஜ துணை தலைவர் ஐ.கருப்பையா உள்ளிட்ட பாஜவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடிகை குஷ்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மிகவும் நிதானமாக பலமுறை யோசித்த பின்பே நான் பாஜவில் இணைந்தேன்.ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர வேண்டும். இந்த நல்ல நோக்கத்தில் தான் நானும் பாஜவுக்கு வந்திருக்கிறேன். மாற்றங்கள் இருக்கலாம். கொள்கை தான் மாறக்கூடாது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு முதல் ஆளாக நானும் குரல் கொடுத்து தான் வருகிறேன். அந்த அடிப்படையில் நான் எப்போதும் என்னை பெரியார்வாதி என்று தான் கூறிக் கொள்வேன்.

நான் எந்த ஷூட்டிங்கும் போகவில்லை. மாதத்தில் 5 நாட்கள் போக மீதமுள்ள 25 நாட்களும் கட்சிப் பணியாற்ற தயாராகத்தான் இருந்தேன். அந்த 25 நாட்களும் காங்கிரஸ்காரர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா? யாரும் எனக்கு எந்தவித அழைப்பும் விடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். நிருபர்கள் குஷ்புவிடம் கணவர் சுந்தர்.சி.கொடுத்த அழுத்தத்தால் தான் பாஜவில் நீங்கள் இணைந்ததாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாரே? என்று கேட்டனர், அதற்கு அவர்,” தன் மீது உள்ள கணத்தை மறைப்பதற்காக மற்றவர் மீது கே.எஸ்.அழகிரி பழி போடுகிறார்” என்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்திலும் குஷ்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: