விழாக்காலம் தொடங்குவதால் நவ., முதல் வாரத்தில் மெரினா கடற்கரை திறக்க வாய்ப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி ஆணையர் தகவல்.!!!

சென்னை: மெரினா கடற்கரை நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வாய்ப்புள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ்  அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு கடந்த 5-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல்   எஸ்.ஆர்.ராஜகோபால், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இருமுறை திறக்கப்படவில்லை.

நவம்பர் 9-ம் தேதி இந்த டெண்டர்கள் திறக்கப்படும்.  கடைகளை அமைக்க மூன்று கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 31  வரை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறக்க முடியாது என்றார். தொடர்ந்து, தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவை திறப்பது  உள்ளிட்டவை தொடர்பாக நவம்பர் 11-ம் தேதிக்குள் (இன்று) சென்னை மாநகராட்சி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

தொடர்ந்து, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, மெரினா கடற்கரையை மக்கள்  பார்வைக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையர்,  விழாக்காலம் தொடங்குவதால் நவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்புள்ளதாக நம்புகிறேன். சென்னை மெரினா கடற்கரையில் 65 ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள்  முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதுடன் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் தடுக்க கண்காணிக்கிறோம் என்றார். மேலும், மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: