பாரதிய ஜனதாவில் சேர்கிறாரா குஷ்பு?: விமானநிலையத்தில் பேட்டி

சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் சேர்கிறீர்களா என்ற கேள்விக்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை என்று குஷ்பு கூறினார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கடந்த சில தினங்களாக டிவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டார். அதுபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா  மருத்துவமனையில் இருந்தபோது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வந்தது. டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று குஷ்பு பாஜவில் இணையப்போவதாகவும் கூறப்பட்டது. அதற்கேற்ப நேற்றிரவு 9.30 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய சென்னை விமானநிலையத்துக்கு குஷ்பு வந்தார். அப்போது அவரிடம், ‘நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வருகிறதே..  உண்மையா’ என்று நிருபர்கள் கேட்டனர்.

அப்போது ‘கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்று குஷ்பு பதிலளித்தார். மேலும் அவரிடம், ‘நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறீர்களா’ என்று கேட்டதற்கு, ‘நோ கமென்ட்ஸ்.. கருத்து கூற விரும்பவில்லை’ என்று கூறிவிட்டு  சென்றார். அவரது கணவரும் திரைப்பட நடிகருமான சுந்தர்.சி.யும் அவருடன் சென்றார்.

Related Stories: