சென்னை: சென்னை அண்ணா நகர் என்.எஸ்.கே நகரில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் ஒரு சில மண்டலங்களில் மட்டும் பாதிப்பு அதிகமாகி உள்ளது. அந்த இடங்களில் இரவு நேரங்களில் சோதனை செய்ய ஏற்பாடு செய்து உள்ளோம். மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் தெருக்களில் மைக்ரோ அளவிலான கட்டுபாட்டு பகுதி ஏற்படுத்தப்படுகிறது. என்றார். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: கொரோனா பாதிப்பு குறைய துவங்கி உள்ள இந்த நேரத்தில் முகக்கவசம் அணிவதை நிறுத்தினால் பாதிப்பு அதிகமாகும்.