திருச்சுழி அருகே குதிரை படத்துடன் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு: தொல்லியல் ஆய்வாளர் தகவல்

விருதுநகர்: திருச்சுழி அருகே குதிரை படத்துடன் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா புரசலூர் கண்மாயில் சிதறி கிடக்கும் கற்களில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக அவ்வூரை சேர்ந்த  உதவி பேராசிரியர்கள் ரமேஷ், ஸ்ரீபால் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு அக்கல்வெட்டுகளை  படியெடுத்து ஆய்வு செய்தார்.பின்னர் இதுகுறித்து ராஜகுரு கூறியதாவது :புரசலூர் கண்மாய் பகுதியில் பழமையான கோயில் இருந்து அழிந்து போயிருக்கிறது. கோயில் கற்கள் கண்மாயில் சிதறி கிடக்கின்றன. இந்த கற்களை  பல ஆண்டுகளுக்கு முன் மடைகள் கட்ட பயன்படுத்தி உள்ளனர். சமீபத்தில் புதிய மடை கட்டுவதற்காக பழைய கற்களை அகற்றியபோது,  கல்வெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். கண்மாயில் சிதறி கிடப்பவை, கோயில் கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள ஜகதி, குமுதம், யாளிவரி ஆகியவற்றின் உடைந்த பகுதிகள் ஆகும்.  இதில் ஜகதியில் இரண்டும், குமுதத்தில் ஒன்றுமாக 3 கல்வெட்டுகள் உள்ளன.

முழுமையாக இல்லாமல் துண்டுகளாக உள்ள கல்வெட்டுகள் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்தவை. குமுதத்தின் உடைந்த கல்லில் உள்ள 4 வரி  கல்வெட்டில் நிலத்தின் எல்லை குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் இவ்வூர் கோயிலுக்கு நிலதானம் வழங்கி இருப்பதை அறிய முடிகிறது. இதில் வருள்வாசகநல்லூர் எனும் ஊர் குறிப்பிடப்படுகிறது. இது  திருவருள் வாசகநல்லூராக இருக்கலாம்.ஜகதியில் இருந்த இரு துண்டுக்கல் வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இதில் ஒன்றில் இத்திகுளத்தராயன் என்பவர் பெயரும், அஞ்சு நிலையூருக்கு சமைந்த காரணவர் பெயரும், அடுத்ததில் வெண்கலம் பறித்து மண்கலம்,  சுபமஸ்து ஆகிய சொற்கள் காணப்படுகின்றன. இதில் காரணவர் பெயருக்கு கீழ் குதிரையின் படம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.காரணவர், படைக்காரணவர் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுபவர்கள் படை வீரர்கள் ஆவர். இந்த கல்வெட்டில் குதிரை படம் வரையப்பட்டு  இருப்பதன் மூலம் அவர்களை குதிரைப்படை வீரர்களாக கருதலாம். அஞ்சு நிலையூர் காரணவர்கள் இந்த ஊர் கோயிலுக்கு தானம் வழங்கி  இருக்கலாம்.

அருப்புக்கோட்டை, இலுப்பைக்குடி, பள்ளிக்குறிச்சி, திருமோகூர் ஆகிய ஊர்களில் இருந்த காரணவர் பற்றி கி.பி.13ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில்  சொல்லப்படுகிறது. படை வீரர்களுக்கு தானமாக மன்னர்கள் வழங்கிய பள்ளிக்குறிச்சி என்ற ஊரை காரணவர்கள் நிர்வகித்துள்ளனர்.கல்வெட்டில் சொல்லப்படும் அஞ்சு நிலையூர் மதுரை அருகில் உள்ள நிலையூராக இருக்கலாம். ராமநாதபுரம் மாவட்டம், மேலக்கிடாரம், நரிப்பையூர்  உள்ளிட்ட சாயல்குடியின் கடற்கரை பகுதியிலும் அருப்புக்கோட்டை, மதுரையிலும் காரணமறவர்கள் என்பவர்கள் தற்போதும் உள்ளது  குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூர் தொடக்கப்பள்ளி அருகில் கி.பி. 18ம் நூற்றாண்டை சேர்ந்த கணவன் இறந்த பின் உடன்கட்டை ஏறிய பெண்களுக்கான இரு  சதிக்கற்களும் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: