அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியில் அறிமுக வேகம் கார்த்திக் தியாகி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அங்கித் ராஜ்பூத் இடம் பெற்றனர். டி காக், கேப்டன் ரோகித் இருவரும் மும்பை இன்னிங்சை தொடங்கினர். துடிப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 49 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. டி காக் 23 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி தியாகி பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டார். ரோகித் 35 ரன் எடுத்து (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கோபால் பந்துவீச்சில் திவாதியா வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.