மண்டபம் கடல் பகுதி பச்சை நிறமாக மாறியது: மீனவர்கள் அதிர்ச்சி

மண்டபம்: மண்டபம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பச்சை நிறமாக மாறியதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முதல் வேதாளை வரை உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி சில தினங்களாக பச்சை நிறத்தில் மாறி வருகிறது. இதனால் பவளப்பாறை மற்றும் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.

கடலில் ஏற்பட்டுள்ள நிற மாற்றம் குறித்து மண்டபம் மத்திய கடல்வாழ் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜெயக்குமார் கூறுகையில்,``தென்மேற்கு பருவமழை காரணமாக மழைநீர் அதிக ஊட்டச்சத்துடன் கடலில் கலந்துள்ளதால், `நாட்டிலுக்கா’ என்ற பாசி உற்பத்தியாகி கரையை நோக்கி வரத் துவங்கியுள்ளது.

இதனால் கடலின் நிறம் மாறியுள்ளது. கடந்த ஆண்டு இதே போன்று தென்மேற்கு பருவமழை காரணமாக அதிகப்படியான பாசி உற்பத்தியாகி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 10 தினங்களாக பச்சை நிறமாக மாறி இருந்த நிலையில் சுமார் 12 டன் அளவிற்கு மீன் இறந்து கரை ஒதுங்கியது. ஆனால், இந்த முறை குறைவான பாசி கரை ஒதுங்குவதால் மீன்களுக்கு ஆபத்து இல்லை’’ என்றார்.

Related Stories: