இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான, நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!!

புதுடெல்லி,: இமாச்சல பிரதேசம் ரோதங் கணவாய்க்கு கீழே 10 ஆயிரம் அடி உயரத்தில், 9.02 கிமீ தூரத்திற்கு ரூ.3,300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள  உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இமாச்சல பிரதேசம் ரோதங் கணவாய்க்கு கீழே மணாலி - லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் அடல் சுரங்கப்பாதை  கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் இமய மலையின் பிர் பஞ்சால் மலைத் தொடரை குடைந்து கட்டப்பட்டுள்ள  இந்த சுரங்கப்பாதை 9.02 கிமீ தூரம் கொண்டது. இதன் மூலம், உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, மிகவும் நீளமான   சுரங்கப்பாதை என்ற பெருமையை இது பெறுகிறது.

இந்த சுரங்கப்பாதை, மணாலியையும் லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கையும் ஆண்டு முழுவதும் இணைக்கிறது. இதற்கு முன் ஆண்டிற்கு 6 மாதம் கடும்  பனிப்பொழிவால், லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. மேலும், இந்த சுரங்கப்பாதை மூலம் மணாலி - லே இடையேயான தூரம் 46 கிமீ குறைவதோடு, பயண நேரம் 4-5 மணி நேரம் குறையும். எனவே,  ராணுவ தளவாடங்களை விரைவில் லே பகுதிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் இந்த சுரங்கப்பாதை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்  கருதப்படுகிறது.ரூ.3,300 கோடியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி  இன்று தொடங்கி  வைத்துள்ளார். சுரங்கப்பாதையில் ஜீப் மூலம் பயணம் செய்யும் பிரதமர் மோடி, லாஹஸ் பள்ளத்தாக்கின் வடக்கு முனையை அடைந்து அங்கு பஸ் போக்குவரத்து  உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பின் பயன்பாட்டுக்கு வருகிறது

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த 2000 ஆண்டு ஜூன் 3ம் தேதி ரோதங் சுரங்கப் பாதையை அமைப்பதற்கு முடிவு செய்தார். 2002ம்  ஆண்டு மே 26ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இது பயன்பாட்டுக்கு வருகிறது. கடந்த 2019ம்  ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ரோதங் சுரங்கபாதைக்கு, ‘அடல் சுரங்கப்பாதை’ என பெயர் மாற்றம் செய்தது.

* ஒவ்வொரு 60 மீ. இடைவெளியில் தீ அணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு 500 மீ. இடைவெளியில் அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்பட்டுள்ளது.

* குதிரை கால் லாடத்தை போல யு வடிவத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு 2.2 கிமீ தூரத்தில் சாலை திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* ஒவ்வொரு 1 கிமீ தூரத்தில் காற்று தர கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.

* 250 மீட்டர் இடைவெளிக்கு ஒரு சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது.

* இந்த சுரங்கப்பாதையில் ஒரு நாளைக்கு 3,000 கார்கள், 1,500 கனரக வாகனங்கள் 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.

Related Stories: