விளையாட்டு துளிகள்

விதியை மீறிய உத்தப்பா:

கொரோனா பீதிக்கு பிறகு  வீரர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த ஐசிசி தடை விதித்தது.  வியர்வையை பயன்படுத்த தடையில்லை. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ்(ஆர்ஆர்)-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(கேகேஆர்) இடையிலான போட்டி துபாயில் நடந்தது. அதன் 2வது இன்னிங்சில் 3வது ஓவரை ஆர்ஆர் வீரர்  உனத்கட் வீசினார். அப்போது 5வது பந்தை கேகேஆர் வீரர் சுனில் நரைன் தூக்கியடித்தார். அந்த பந்தை மிட் ஆனில் இருந்த ராபின் உத்தப்பா கேட்ச் பிடிக்காமல் தவற விட்டார். ஆனாலும் பந்தை எடுத்தவர் அதை உனத்கட்டுக்கு எறியும் முன்பு எச்சிலை தொட்டு பளபளப்பாக்கினார். இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்தப்பா அதை வேண்டுமென்று செய்யவில்லை. பழைய நினைவில் அப்படி செய்திருக்கலாம். ஆனாலும் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஐசிசி விதிகளின்படி ஒரு இன்னிங்சில் 2முறை எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பிறகும் எச்சரிக்கை விடுக்கும் சூழல் ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட வீரர் விளையாடும் அணியின் ஸ்கோரில் இருந்து 5 ரன் குறைக்கப்படும்.

எல்லோருக்கும் தோல்வி:

ஐபிஎல் தொடரில் புதன்கிழமை வரை ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடி முடித்து உள்ளன. வழக்கமாக ஐபிஎல் சீசன்களில் ஆறேழு ஆட்டங்கள் முடியும் வரை கூட தோற்காத, வெற்றிபெறாத அணிகள் ஒன்றிரண்டாவது இருக்கும். ஆனால் இந்த சீசனில் வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் தொட்டு பார்க்காத அணி ஏதுமில்லை. புள்ளிப்பட்டியலில்  முதல் 4 இடங்களில் உள்ள  டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய அணிகள் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி தலா 2வெற்றிகளையும், தலா ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளன. கடைசி 4 இடங்களில் உள்ள பஞ்சாப், மும்பை, ஐதராபாத், சென்னை ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி, தலா 2 தோல்விகளை பெற்றுள்ளன.

நாங்கள் சரியாக விளையாடவில்லை:

கொல்கத்தா அணி 37 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. வெற்றிக்கு பிறகு பேசிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘ இன்றைய போட்டியை சரியான விளையாட்டு என்று சொல்ல மாட்டேன். பேட்டிங், பீல்டிங் என பல விஷயங்களை மேம்படுத்த வேண்டும். ஷூப்மன், ரஸ்ஸல் ஆகியோர் பேட் செய்த விதம், ஆர்ச்சர், மாவி ஆகியோர் பந்து வீசிய முறை நன்றாக இருந்தது. அதேபோல் இளம் வீரர்கள் கேட்ச் பிடித்ததில் ஈர்த்தனர். ரன்னை அதிகரிப்பதே வெற்றிக்கான வழி என்பதை இலக்காக கொண்டு விளையாடினோம்’ என்றார்.

அசத்திய மூவரணி:

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு புதிய பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி,  கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோரும் காரணம். மூவரும் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். வருண், ஷிவம் ஆகியோர் தலா ஒரு கேட்ச்சும், கமலேஷ் 2 கேட்ச்சும் பிடித்து மேலும் 4 விக்கெட்கள் விழ உதவினர்.

Related Stories: