களக்காடு: களக்காடு தலையணை மலையடிவாரத்தில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். களக்காடு தலையணை மலையடிவாரத்தில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் யானை, இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. கடந்த சில நாட்களாக சிவபுரம், புதுக்குளம், கள்ளிகுளம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட ரசகதலி ஏத்தன் வாழைகளை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். பகல் நேரங்களில் கூட விவசாய பணிகளுக்கு விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை எழுந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.