லக்னோ: வேளாண் மசோதா விவாகத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்டவிதம் ஜனநாயகத்திற்கு எதிரானது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் செல்வி மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறையான வாக்கெடுப்புகளை நடத்தி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், சபை விதிமுறை புத்தகங்களை கிழித்தெறிந்தும், மசோதா நகல்களை எரித்தும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் டெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜிவ் சவ்தாவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஜீர் உசேன் மற்றும் இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.