கன்னடர்களுக்கே வேலை வாய்ப்பு அளிங்கள் : தனியார் நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல்!!!

பெங்களூர் : கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு வேலைவாய்ப்புகள் முழுக்க முழுக்க கன்னடர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. சொந்த மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் கர்நாடக  அரசின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது மட்டுமின்றி, பிற மாநிலங்களால் பின்பற்றப்பட வேண்டியதும் ஆகும்.

கர்நாடக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது இந்த தகவலை தெரிவித்த அம்மாநில சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி,‘‘ கர்நாடக அரசு வழங்கும் சலுகைகளை பெறும் தனியார் நிறுவனங்களாக இருந்தாலும், பெறாத தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் அவை கன்னடர்களுக்கு மட்டும் தான் சி மற்றும் டி பிரிவு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி ஏ மற்றும் பி வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்’’ என்று தெரிவித்தார். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு வேலை தேடி செல்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதே உண்மை.

கர்நாடகத்தில் மட்டும் தான் இந்த நிலைமை என்பது இல்லை. ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75% ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவில் தனிச்சட்டம் எதுவும் இல்லை என்றாலும் ஐதராபாத் தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால் அரசு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் அம்மாநிலத்தைச்  சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது? என்பது கேள்விக்குறியே!!

Related Stories: