பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கால்நடைகளுக்கு செயற்கையான முறையில் கருவூட்டல் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 687 மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களில், ‘தேசிய பயிலரங்கம்’ நடத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது.  இவற்றில் கால்நடைகளுக்கு தடுப்பூசி அளிப்பது, நோய் மேலாண்மை, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் இனப் பெருக்கம் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த பயிலரங்குகள்,  தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மதுராவில் தொடங்கி வைத்தார்.  கால்நடைகளை செயற்கை முறையில் கருவூட்டல் செய்வது, தமிழகத்தில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இதில், உயர் ரக கால்நடைகள், அதிக பால் உற்பத்தி அளிக்கும் இனத்தை சேர்ந்த காளைகளிடம் இருந்து பெறப்பட்டு உறை வெப்ப நிலையில் சேமித்து வைக்கப்படும் அதன் விந்தணுக்கள், செயற்கை முறையில் பசு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த செயற்கை கருவூட்டல் நடைமுறையை எதிர்த்து டாக்டர் வெங்கடேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில்,  ‘கால்நடைகளை செயற்கை முறையில் கருவூட்டல் செய்வது, இயற்கைக்கு மாறானது. இதை செயல்படுத்தும் போது கால்நடைகள் துன்புறுத்தப்படுகின்றன. இது சட்டத்திற்கு எதிரானது என்பதால், இதுபோன்ற திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா மற்றும் ராமசுப்ரமணியன் அமர்வில், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று மனு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: