புதுடெல்லி: ‘ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்களே பயணிகள் டிக்கெட் கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயித்துக் கொள்ளலாம்,’ என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ரயில்வே சேவையில் தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் ரயில்வே கட்டணங்கள் அரசியல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு நாளும் பல கோடி மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஏழை மக்கள் பெரும்பாலும் தங்கள் போக்குவரத்துக்கு ரயில்களையே சார்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக ரயில்வே துறையானது அலட்சியம் மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் சூழப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது ரயில் நிலையங்களை நவீனமயமாக்குதல், ரயில்களை இயக்குதல் என அனைத்திலும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது.