அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கி கணக்கில் 6 லட்சம் மோசடி

அயோத்தி: உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்து போலி காசோலை மூலமாக ரூ.6 லட்சம் எடுத்து  மோசடி செய்யப்பட்டுள்ளது.  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கோயிலின்  கட்டுமான பணிகளை செய்வதற்காக, ‘ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகம் முழுவதிலும்  இருந்து பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்த அறக்கட்டளையின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. இந்நிலையில், போலி காசோலை மூலமாக இந்த அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்து, மர்ம நபர் ஒருவர் 2 முறை போலி காசோலையை  அளித்து ரூ.6 லட்சம் எடுத்து மோசடி செய்துள்ளார்.

கடந்த 1ம் தேதி ரூ.2.5 லட்சமும், 8ம் தேதி ரூ.3.5 லட்சமும் எடுக்கப்பட்டுள்ளது.  3வது முறையாக போலி காசோலை மூலமாக ரூ.9.86 லட்சம்  எடுக்க முயற்சிக்கப்பட்ட போது, அதை உறுதி செய்வதற்காக அறக்கட்டளையின் செயலாளருக்கு வங்கி அதிகாரி தொலைபேசியில் பேசியுள்ளார்.  அப்போதுதான், அறக்கட்டளையில் இருந்து யாருக்கும் காசோலை தரவில்லை என்பது தெரிந்தது. இது பற்றி கோத்வாலி காவல் நிலையத்தில் அறக்கட்டளையின் செயலாளரும், விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான சம்பத் ராய் புகார்  அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வங்கி கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.

Related Stories: