காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றம்!: மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், செல்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களின் நலத்திட்ட பணிகளுக்கான விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கவுள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீறி பிரம்மாண்ட அ.தி.மு.க பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் தொலைவில் சாலையின் இருபுறமும் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரில் விதிகளை மீறி வைக்கப்பட்ட அ.தி.மு.க பேனர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரத்தில் மேட்டுத்தெரு, மூங்கில் மண்டபம், ரங்கசாமிக்குளம், காந்திசாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் அதிமுக-வின் பிரம்மாண்ட பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. காஞ்சிரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேனர்களை அதிகாரிகள் தற்போது வரை அகற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தில் முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அதிகாரிகள் அகற்றியது அதிமுக-வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: