லண்டன்: கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இங்கிலாந்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் இதுவரை 3,35,873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,501 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையிலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கொரோனா வைரஸால் பள்ளியில் ஏற்படும் ஆபத்து குறைவு. குழந்தையின் வளர்ச்சிக்கும் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கும் இனியும் பள்ளியிலிருந்து விலகியிருப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். நம் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குள் அழைத்துச் செல்வதும், அவர்களுடைய நண்பர்களுடன் இருப்பதும் மிக முக்கியம்.