மான்செஸ்டர்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டி20 போட்டியில் கேப்டன் மோர்கன் மாலன் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் 56 ரன் (44 பந்து, 7 பவுண்டரி), பக்கார் ஜமான் 36 ரன், முகமது ஹபீஸ் 69 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.