திருச்சி: சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்றாலே 60 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று திருச்சியில் தமிழக பாஜக தலைவர் முருகன் கூறினார். திருச்சி தீரன்நகரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் வினோஜ்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் முருகன் கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பாஜகவினர் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். தமிழகத்தில் மும்மொழி கொள்கை இல்லாததால் பல ஏழை எளிய மாணவர்களுக்கு 3வது மொழி கற்க முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் பல மொழிகள் கற்க விருப்பமாக உள்ளனர். அதை தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.