தனித்து நின்றாலே 60 தொகுதியில் வெற்றி பெறும் வாய்ப்பு: தமிழக பாஜக தலைவர் முருகன் தகவல்

திருச்சி: சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்றாலே 60 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று திருச்சியில் தமிழக பாஜக தலைவர் முருகன் கூறினார். திருச்சி தீரன்நகரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் வினோஜ்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் முருகன் கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பாஜகவினர் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். தமிழகத்தில் மும்மொழி கொள்கை இல்லாததால் பல ஏழை எளிய மாணவர்களுக்கு 3வது மொழி கற்க முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் பல மொழிகள் கற்க விருப்பமாக உள்ளனர். அதை தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக முக்கிய பங்காற்றும். நாங்கள் தனித்து நின்றாலே 60 சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதிக அளவிலான பாஜகவினர் வரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வார்கள்.

அதிமுக, பாஜக இடையே கூட்டணி உறவு சிறப்பாக இருக்கிறது. எங்களுக்குள் எந்த சிக்கலும், விரிசலும் இல்லை. கூட்டணி குறித்து தேவையற்ற சர்ச்சைகளை மக்கள் தான் உருவாக்குகிறார்கள். கட்சி தலைமை என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். கட்சியில் இணைந்த பின்பு அவர்களின் செயல்பாடுகள் சரியில்லையென்றால் நடவடிக்கை  எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: