அசன்சியன்: போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததற்காக பராகுவேயில் கைது செய்யப்பட்ட பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ 5 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பை வென்ற பிரேசில் அணியில் விளையாடியவர் ரொனால்டினோ (40). சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக இவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்ச் மாதம் பராகுவேயில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். இதற்காக போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய புகாரில் மார்ச் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். உடன் சென்ற அவரது மேலாளரும் சகோதரருமான ரபார்ட்டோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பராகுவே கால்பந்து சங்கம் மேற்கொண்ட தொடர் முயற்சிகளை அடுத்து, மார்ச் மாத இறுதியில் வீட்டுசிறையில் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் அசன்சியானில் உள்ள சொகுசு விடுதியில் ரொனால்டினோ தங்கியிருந்தார்.