பெரியகுளம் பெரியகுளம் அருகே, கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை விவசாய நிலங்களில் குவிப்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவைகளை குழி தோண்டி புதைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் அருகே, நல்லகருப்பன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவு உள்ளது. இங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் கழிவுகள், அவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம், சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள், மருத்துவர்களின் கவச உடைகள் உள்ளிட்ட அனைத்து கழிவு பொருட்களையும் அருகில் உள்ள விளைநிலங்களில் குவித்து வருகின்றனர்.