ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னிக்கு அளித்த தேநீரில் விஷம்?: செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை..!!

மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கலந்த தேநீரைக் குடித்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையின் தலைவருமான நவல்னி, ஆளும் புதின் அரசாங்கத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இதனால் ஆளும்கட்சியின் மிக முக்கிய எதிர்ப்பாளராக பார்க்கப்படும் நவல்னிக்கும், ஆளும்கட்சியினருக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், நவல்னி சைபீரியாவில் இருந்து மாஸ்க்கோவிற்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்கி உள்ளனர். நவல்னியின் உடல்நிலை மிக மோசமானதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அருந்திய தேநீரில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாக அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பது ரஷ்ய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானப்பயண நாளன்று காலை அவர் தேநீர் மட்டும்தான் குடித்ததாகவும், வேண்டுமென்றே யாரோ அதில் விஷம் வைத்துள்ளதாக தான் நினைப்பதாகவும் அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நவல்னி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் அறிக்கையை இணைத்து ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 44 வயதான நவல்னி மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: