ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியக்குறைப்பு முதல்வர் நேரடியாக தீர்வு காணவேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்று (நேற்று) என்னைச் சந்தித்த “ஸ்விக்கி” உணவு விநியோக ஊழியர்கள், “கொரோனாவை காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும், அதற்காகவே தொடர் போராட்டம் நடத்தியதாகவும் கூறிய போது அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன். ஊரடங்கு நேரத்திலும் ‘ஆன்லைன் ஆர்டர்’  மூலம் உணவை எடுத்து  சென்று வழங்கி- வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் மக்களின் வயிற்றுப் பசியாற்றிய இந்த ஊழியர்களின் போராட்டத்தை ‘ஸ்விக்கி’ நிறுவனம் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் போராட்டத்தை அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததும், மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஆகவே, ஸ்விக்கி ஊழியர்களை உடனடியாக அழைத்துப் பேசி,  ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று ‘ஸ்விக்கி’’ நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறும், அவ்வாறு அந்த நிறுவனம் கேட்கவில்லையென்றால் முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு ஊழியர்களையும், நிறுவனத்தையும் அழைத்துப் பேசி ஊழியர்களின் ஊதியப் பிரச்னைக்கு ஒரு சுமூகத் தீர்வு காண வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: