விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விழாக்குழுவினருடன் போலீசார் ஆலோசனை

பொன்னேரி: பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் பொன்னேரி சுற்றுவட்டார விநாயகர் சிலை அமைப்புக் குழுவினர், ஆன்மிகவாதிகள் மற்றும் பாஜவினருடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில், பொன்னேரி உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கல்பனாதத், “கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் அரசின் விதிமுறைகளின்படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தக்கூடாது” என தெரிவித்தார். இதற்கு விழாக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், விழக்குழுவினர், “விநாயகர் சிலைகள் வைப்பதால் மட்டும் தான் கொரோனா பரவுகிறதா. டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் என அங்கெல்லாம் கொரோனா பரவாதா. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளின்படி தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வழக்கமான இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.

பல கோடி ரூபாய் முதலீடு செய்து தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடை விதிக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். காலம், காலமாக நடத்தப்பட்டு வரும் வழிபாட்டு உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது” என்று  தெரிவித்தனர். இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களின் கருத்துக்களை அரசிடம் எடுத்து கூறி அரசின் முடிவை மீண்டும் கூட்டம் போட்டு தெரிவிப்பதாக கூறினர். இதற்கு, அரசு எந்த முடிவெடுத்தாலும் திட்டவட்டமாக விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்படும் என சிலை அமைப்புக் குழுவினர் உறுதியாக தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், பொன்னேரி தொகுதி விநாயகர் சதுர்த்தி குழு தலைவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், பத்மநாபன், நந்தன், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த விநாயகர் சிலை அமைப்பாளர்கள் மற்றும் திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆகியோருடன் போலீசாரின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமை தாங்கினார். தலைமை காவலர்கள் கமலநாதன், பாபு, அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், விநாயகர் சதுர்த்தி அன்று யாரும் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடக்கூடாது. ஊர்வலம் செல்லக்கூடாது. சிலைகளை தயாரித்து விற்பனை செய்யவும் கூடாது. மேலும், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் போட வரும் கார், பைக், லாரி போன்ற வாகனங்களில் முன்பும், பின்பும் உள்ள நம்பர் தெரியக்கூடிய அளவுக்கு நவீன கேமராக்களை பெட்ரோல் பங்கை சுற்றி பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Related Stories: