சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அவர் சென்னை சூளைமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது தனது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் விரைவில் குணமாகி திரும்புவேன் என்றும் எஸ்.பி.பி கூறியிருந்தார். இதற்கிடையே அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.