பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை மலைச்சாலையில் ஆபத்தாக சரியும் நிலையில் உள்ள பாறைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலை 15 கிமீ தூரம் கொண்டதாகும். ஆபத்தான பள்ளத்தாக்குகளும், வளைவுகளும் நிறைந்த இந்த குறுகிய சாலையில்தான் தினந்தோறும் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள 20க்கும் மேற்பட்ட மலையடிவார கிராமங்களை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மலைப்பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் என பலர் டூவீலர், கார், ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களில் சென்று வருகின்றனர். தவிர வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் செல்லும் ரோடு மழைக்காலத்தில் துண்டிக்கப்பட்டால் மாற்று வழித்தடமாக சித்தரேவு- பெரும்பாறை வழியாக பண்ணைக்காடு சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லலாம். மேலும் இச்சாலை 40க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களை இணைக்கும் முக்கிய ரோடாகும்.