பெங்களூரு: விபத்தில் உயிரிழந்த மனைவியின் நினைவாக தத்ரூபமான சிலை ஒன்றை அமைத்துள்ளார் தொழிலதிபர் ஒருவர். பார்ப்பவர்கள் மனதில் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கொப்பள் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ் குப்தாவின் அன்பு மனைவி மாதவி. இவர் 2017-ம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். மனைவியின் ஆசைக்காக வீடு கட்டி வந்த சீனிவாஸ், அவரது மறைவுக்குப் பிறகு பணிகளைக் கிடப்பில் போட்டார். பின்பு மகள்களின் வற்புறுத்தலால் வீடு கட்டி முடித்துள்ளார். எனினும், புதிய வீட்டில் மனைவி இல்லாத மனக்குறை தெரியக் கூடாது என்று யோசித்த போதுதான், சிலை வைக்கலாம் என்று தோன்றியுள்ளது. பெங்களூரு சிலை வடிவமைப்பாளர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவர் உயிரோட்ட உள்ளதாக மாதவியின் சிலையைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.