சென்னை: இந்தி ஏகாதிபத்தியத்தை வேரோடு சாய்க்க தமிழகம் எவ்வித தியாகத்துக்கும் தயார் என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையை முடித்துச் செல்லும்போது, அங்கு பணியில் இருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர் கொரோனா நடவடிக்கைகள் குறித்து, கனிமொழியிடம் இந்தி மொழியில் உரையாடி இருக்கிறார். அதற்குக் கனிமொழி எம்.பி., எனக்கு இந்தி புரியவில்லை. எனவே தமிழ் அல்லது ஆங்கில மொழியில் பேசுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு அந்தப் பெண் அதிகாரி கனிமொழியைப் பார்த்து, ‘நீங்கள் இந்தியரா?’ என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.