டெல்லி: வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றார். ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.3 சதவிகிதமும் தொடரும் என்று அவர் அறிவித்தார். தற்போதைய நெருக்கடி சூழலை கருத்தில் கொண்டு வங்கிகளில் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் அளவிற்கு கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், வேளாண்மை அல்லாத பிற தேவைகளுக்காக வங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்க நகைகளின் மதிப்பில் 75 சதவீதம் தற்போது கடனாக தரப்படுகிறது. கொரோனாவால் எழுந்துள்ள நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு 2021, மார்ச் 31ம் தேதி வரை நகைகளின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் கொடுக்க அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்பதை உறுதிப்படுத்திய சக்திகாந்த தாஸ், கடந்த ஏப்ரலுக்கு பிறகு தொழிற்துறை வளர்ச்சி பாதையில் பயணிப்பதாக கூறினார். ரெப்போ ரேட்டை அப்படியே தொடர ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதால் வங்கிகளில் நாம் பெரும் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.