இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு!: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..!!

கொழும்பு: இலங்கையில் 9வது நாடாளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதையொட்டி வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இலங்கை தேர்தலில் ஆளுங்கட்சியான ராஜபக்சே சகோதரர்களின் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்த சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் போட்டியிடுகின்றன.

பதுளை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் செந்தில் தொண்டமானை ஆதரித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சாலையில் இறங்கி கூடியிருந்த மக்களிடம் அவர் ஆதரவு திரட்டினார். அப்போது கோத்தபாய ராஜபக்சேவுக்கு அங்கு கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேசிய வேட்பாளர் செந்தில் தொண்டமான், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 12,984 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமையில் இருப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதி கிடையாது. கொரோனா அச்சுறுத்தலால் வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் 6ம் தேதியே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இலங்கை நாடாளுமன்றத்திற்கு மொத்த இடங்கள் 196 ஆகும். அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உட்பட 7,452 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

Related Stories: