தமிழகத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி : தமிழக அரசு தகவல்!!

சென்னை : தமிழகத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து இருப்பதாக தமிழக அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.  வேளாண்துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் மற்றும் வேளாண் இயக்குனர் தக்ஷணாமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வயல்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவும், கடைமடை பாசன பகுதிகளுக்கு 25 தினங்களுக்கு முன்பாகவும் பாசன நீர் சென்றடைந்தது.

இந்த ஆண்டில், டெல்டா மாவட்டங்களில் 3ம் தேதி (நேற்று) நிலவரப்படி 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டு வரலாற்றில் அதிகபட்ச பரப்பு  இதுதான். கடந்த 2019ம் ஆண்டில் 2.80 லட்சம் ஏக்கர் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டைவிட சுமார் 1லட்சம் ஏக்கர் பரப்பளவில் கூடுதலாக குறுவை சாகுபடி நடப்பாண்டில் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் 6.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என கூறப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 270 கிராமங்கள் பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: