ராமேஸ்வரம்: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தை சேர்ந்த மீனவர் அந்தோணிராஜ் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை ஆழ்கடல் மீன்பிடிப்படகு பாக்ஜலசந்தி கடல் பகுதி வழியாக நேற்று மாலை பாம்பன் வடக்கு கடல் பகுதிக்கு வந்தது. மாலை நேரம் என்பதால் கப்பல் செல்லும்போது திறக்கப்படும் தூக்குப்பாலம் திறக்கப்படவில்லை. படகில் இருந்த மீனவர்கள் தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு செல்வதற்காக மாலை 6.30 மணியளவில் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது படகின் வீல்ஹவுஸ் மேல் பகுதி, தூக்குப்பாலத்தின் இரும்பு கர்டர் மீது மோதி நின்றது. இதனால் படகு தொடர்ந்து செல்ல முடியாமல் நீரோட்டத்தின் போக்கின் கிழக்கு மேற்காக பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது.