டெல்லி : தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை என்று பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். இந்திய விமானப்படையை வலுப்படுத்துவதற்காக பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்களில் 5 விமானங்கள் 7 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் இன்று பிற்பகல் தரையிறங்கின. 5 விமானங்களுக்கும் தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவிலிருந்து சுகோய் 30 எம்கேஐ விமானம் வாங்கப்பட்டது. அதன்பின் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட போர்விமானங்கள் இதுவாகும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பிரான்ஸ், எகிப்து கத்தார் ஆகியவற்றை தொடர்ந்து ரஃபேல் போர் விமானங்கள் வைத்திருக்கும் 4வது நாடாக இந்தியா மாறியுள்ளது.