3வது சுற்றிலும் ஆனந்த் தோல்வி

சென்னை: முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் ஆப் செஸ்’ ஆன் லைன் போட்டியில் விஸ்வாதன் ஆனந்த் 3வது சுற்றிலும் தோல்வியை சந்தித்துள்ளார். ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில்,

ஆனந்த் உட்பட  உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். 9 சுற்றுகளை கொண்ட லீக் போட்டி ஜூலை 29 வரையிலும், அரையிறுதி ஜூலை 31 - ஆக. 2 மற்றும் பைனல் ஆக.3 - ஆக.5 வரை நடக்க உள்ளது. முன்னாள் உலக சாம்பியனான ஆனந்த், முதல் 2 சுற்றுகளில் முறையே பீட்டர் ஸ்விட்லர் (ரஷ்யா), நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே)ஆகியோரிடம் தோற்றார்.

இந்நிலையில் நேற்று நடந்த 3வது சுற்றில் ரஷ்யாவின்  விளாடிமிர் கிராம்னிக்குடன் போராடி தோற்றார். தொடர்ந்து 3 சுற்றுகளை இழந்ததின் மூலம் ஆனந்த் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார். ஸ்விட்லர், கார்ல்சன் ஆகியோர் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனந்த் 4வது சுற்றில் அனீஷ் கிரியுடன் மோதுகிறார்.

Related Stories: