திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள போசம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் பரமசிவம்(50), உடையப்பன்(55). உறவினர்களான இவர்கள், கிராமத்தில் இரு தரப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் உடையப்பன் தரப்பில் போட்டியிட்ட வேட்பாளரை தோற்கடிக்க பரமசிவம் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் உடையப்பன் தரப்பை சேர்ந்தவர்கள் குறித்து தவறாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதில் ஆத்திரமடைந்த உடையப்பன் தரப்பினர் நேற்று முன்தினம், பரமசிவம் மற்றும் அவரது மகனை தாக்கினர். இதில், பரமசிவத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.