மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,338-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 329 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் அமைந்துள்ளது தாராவி. இது ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கிருக்கும் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியபோது, அது தாராவியையும் விட்டுவைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தாராவியில், முதல் பாசிட்டிவ் கேஸ் உறுதியானது.